பணிப்பாளர் அவர்களே!-
நீங்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று வளமுடன் வாழ வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கொறோணா நோய் நிலைமை காரணமாக நீங்கள் பல வேலைப் பளுக்களுக்கு உள்ளாகியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஆனாலும் எனது ஊர் மக்கள் நலன்கருதி இந்த மடலை தங்கள் முன் சமர்ப்பிக்கும் நான் பாலமுனை ஊரைச் சேர்ந்த ஒரு பொதுநலன் விரும்பி.
பணிப்பாளர் அவர்களே! எனது ஊரிலுள்ள வைத்தியசாலை தற்போது கொறோணா சிகிச்சைக்கான விசேட வைத்தியசாலையாக தங்களால் மாற்றம் செய்யப்பட்டு சுமார் கடந்த 02 மாதங்களாக சேவை வழங்கி வருகின்றது. இதில் பல சங்கடங்கள் மற்றும் அசௌகரியங்கள் இருந்தாலும், தேசிய அனர்த்த அபாய நிலமைக்கு பங்களிப்பு செய்தவர்கள் என்றவகையில் நாங்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்.
ஆனாலும் எமது ஊரில் உள்ள மக்களுக்கு தற்போது ஒரு சந்தேகமும் அதனையொட்டிய பயமும் பதகளிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனை எமது மக்கள் மத்தியில் தெளிவூட்டல் செய்து, அந்த நிலையை இல்லாமல் செய்வதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடயத்திற்கு வருகின்றேன்.
கொறோனாவினால் மரணித்த பிரேதங்களை மண்ணில் புதைப்பதால் நிலக் கீழ் நீர் மாசடைந்து கொறோனா பரவுமாம்? ஆகவே அதனை எரிக்க வேண்டுமாம்.
இது இலங்கையிலுள்ள புத்திசீவிகளின் ஆய்வு முடிவு.
(பேராசிரியை மெதிகா போன்றவர்களின் ஆய்வு முடிவு)
இவ்வாறான பேராசிரியர்களின் விஞ்ஞானபூர்வமான அடிப்படையில்லாத கருத்துக்களை ஆதாரமாக கொண்டு நமது நாட்டின் சுகாதார திணைக்களம் மரணிப்பவர்களை எரிப்பதற்கான நிலைப்பாட்டில் இதுவரை விடாப்பிடியாக இருந்து அரசை இந்த விவகாரத்தில் பிழையாக வழிநடத்தி வருகின்றனர் என்பது எமது கலவையாகும்.
சரி அவர்களின் ஆய்வுகள் அதனடிப்படையிலான சுகாதாரத்துறையின் தீர்மானம் சரி என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியானால், எமது பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற கொறோனா நோயாளிகளின் மலம், சலம், குளித்த நீர், எச்சில் மற்றும் வியர்வை, அவர்களது உணவுக் கழிவுகள், உடுப்புக் கழுவிய நீர் நிலத்தில் விடப்படுவதால் நிலக் கீழ் நீர் மாசடையாதா? எமது ஊரில் கொறோனாவும் பரவாதா?
இந்த கழிவுகளை எரிப்பதற்கான Incinerator இயந்திரம் கூட தங்களால் இன்னும் இங்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை. நாளாந்தம் நாய்களினதும் காகங்களினதும் தொல்லை ஒரு பக்கம்.
பணிப்பாளர் அவர்களே! இந்த விடயத்தில் எமது ஊர் மக்கள் கொண்டுள்ள நியாயமான ஐய்யப்பாட்டினை தீர்க்க தாங்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களை வேண்டிக்கொள்கிறேன்.
0 comments :
Post a Comment