கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள பகுதியில் இனந்தெரியாத நபரால் வீசப்பட்ட பொதி ஒன்றினால் அப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குண்டு அடங்கிய பொதி போன்ற இந்த பொதி காணப்பட்டதால் பொறளை பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு பொலிஸாரும், விசேட அதிரடிப்படை மற்றும் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரும் விரைந்தனர்.
எனினும் குறித்த பொதியில் கையடக்கத் தொலைபேசி, அதன் சார்ஜர், ஐஸ் போதைப்பொருள் என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இந்த பொதி சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்டதால், கைதி ஒருவருக்காக வெளியிலிருந்து ஒருவர் அவருக்கு வழங்க செய்த முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.