சுயேட்சைக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.அஸீம் அவர்களின் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றம்.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அவரவர் சமய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் கல்முனை மாநகர சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று வியாழக்கிழமை (21) மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் பழைய சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இவ்விடயம் தொடர்பிலான பிரேரணையை சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.அஸீம் சமர்ப்பித்திருந்தார்.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வது எமது மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான செயற்பாடாகும். இதனால் முஸ்லிம்கள் மிகவும் வேதனையடைகின்றனர். ஆகையினால் யாராக இருந்தாலும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தால், அவர்களை, அவரவர் சமய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று உறுப்பினர் ஏ.ஆர்.அஸீம் இதன்போது வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இப்பிரேரணையை ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோருக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநகர மேயர் றகீப் அவர்கள், சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.
அத்துடன் இன்றைய அமர்வின்போது உறுப்பினர் அஸீம் அவர்களாலும் கல்முனை மாநகர சபையினால் அறவிடப்படும் தின்மக் கழிவகற்றல் முகாமைத்துவ வரியினால் மக்கள் முகங்கொடுக்கும் சிரமங்கள் தொடர்பிலும் மேயரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மக்களின் நலன் கருதி குறித்த வரி அறவீட்டை தற்காலிகமாக இடைத்த நடவடிக்கை எடுப்பதாக மேயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.