ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மாற்றம் செய்யப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை பல்கலைக்கழகங்களில் காணப்படும் துணைவேந்தர் வெற்றிடத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சிறப்பு பொறிமுறை ஒன்றின் ஊடாக அதி உச்சதிறனும் அனுபவம் உள்ளவர்களை போட்டியாளர்களாக தெரிவு செய்யவேண்டும்.
சிறப்பு பொறிமுறையில் தனியார் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ள முகாமைத்துவ அதிகாரி, இலங்கை நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர் மற்றும் சேவையில் உள்ளவர் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த சிறப்பு பொறிமுறை, துணைவேந்தருக்கு விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் அவ்வாறு நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் அடிப்படையில் அதிஉச்ச திறனும் அனுபவமும் உள்ளவர்களின் பெயர்களை சிறப்பு பொறிமுறை, பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சிறப்பு பொறிமுறையில் உள்ளவர்களுடன் தமது செல்வாக்கை செலுத்த அல்லது அவர்களது பணியில் தலையீடு செய்ய முற்படும் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது பல்கலைக்கழக பேரவையிடம் உள்ள இந்த அதிகாரம் சிறப்பு பொறிமுறையிடம் வழங்கப்படுகிறது. அதாவது பல்கலைக்கழக பேரவையின் அதிகாரம் நீர்த்துப்போய்விடக்கூடிய அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் போட்டியிடுபவர்கள் பேரவையினால் வாக்களித்து தெரிவு செய்யப்படுபவர்களா? என்ற விளக்கமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய நடைமுறையில் இல்லை. என்று தெரியவருகிறது.