சிரேஷ்ட சட்டத்தரணி முகம்மத் ஷாரிக் காரியப்பர் உத்தியோகப்பற்றற்ற நீதவானாக நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரண்ட மாரசிங்க முன்னிலையில் அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
சாய்ந்தமருது அல் - கமறூன் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர், கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் உயர் கல்வியையும் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் தனது சட்டக் கல்வியைப் பூர்த்தி செய்த இவர், இலங்கை சட்டக் கல்லுரியில் சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சையில் திறமைச் சித்தி (HONOURS) பெற்று சித்தியடைந்தார்.
2002ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட இவர், இலவச சட்டக் கோவையின் தந்தை என அழைக்கப்படுகின்ற மறைந்த எஸ்.எஸ். விஜேரட்ணவுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக முதன் முதலாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாவட்ட நீதிமன்றில் சட்ட உதவி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு, அதன் முதலாவது இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் வருகை தரு விரிவுரையாளராகக் கடமையாற்றிய சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர், தற்போது முகாமைத்துவ பீடத்தின் பீட சபையின் (Faculty Board) அங்கத்தவராகத் தற்போது பதவி வகிக்கின்றார்.
முன்னாள் அமைச்சர் கேட்முதலியார் எம். எஸ். காரியப்பரின் பேரனான இவர், ஓய்வு பெற்ற ஆச்சிரியர் ஷக்காப் காரியப்பர் மற்றும் ஜெஸீமா ஆகியோரின் புதல்வருமாவார்.