இனவாதத் தூண்டுதலின் விளைவாக அண்மைக் காலங்களில் ஒருசில அசம்பாவிதங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இவற்றுக்கு பொதுபலசேனா மீதே விரல் நீட்டப்பட்டுள்ளது. மற்றும் சில தரப்புகள் வேறு விதமான கருத்துகளையும் முன்வைத்தன. மேற்படி விடயங்கள் தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றியும் தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரருடன் ‘அத’ சிங்கள மொழி ஊடகம் மேற்கொண்ட பேட்டியின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
இன்றுள்ள அரசியல் நிலை குறித்து உங்கள் கருத்தென்ன?
பதில்: இன்று மிகவும் கவலைப்படக்கூடிய அரசியல் நிலையொன்றே உருவாகியிருக்கிறது. விஷேடமாக இன்று பொருளாதாரம் சிதைந்து விட்டது. அதனை முகாமைத்துவப்படுத்தி சீர் செய்யக்கூடிய நிலை அரசுக்கு இல்லை. மறுபுறத்தில் அடிப்படை வசதிகளை முறையாகக் கையாளக் கூடிய வேலைத்திட்டங்களும் இந்த அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தியாவசியமான இந்த இரு காரணிகளும் செயலிழக்கப்படும்போது நாட்டு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போவது உறுதி. இந்த நிலையைத் தான் இப்போது எமது நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
அண்மையில் மதவாத மோதல்கள் சில தலைதூக்கின. இவற்றுக்குப் பலரும் பொதுபலசேனா மீது குற்றம் சுமத்தினர். இது குறித்து உங்கள் கருத்தென்ன?
பதில்: இந்த அரசு மறைமுகமாக அடிப்படை வாதிகளுக்கு வாய்ப்பளித்திருப்பதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. இந்த அரசு செயலிழந்து செயற்படுவதை இந்நாட்டு சிங்கள பௌத்தர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், ஆகிய சமூகத்தினரில் பெரும்பாலோனோர் உணர்ந்துள்ளனர். இது எல்லா அடிப்படை வாதிகளுக்கும் வாய்ப்பாக அமைந்து விட்டது. சிங்கள பௌத்த சக்தி மஹிந்த ராஜபக் ஷவின் பிடியில் இருக்கிறது. இதனை செயற்படுத்தும் ஓர் ஊடகமாக பொதுபலசேனா அமைப்பு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: அவர் குறித்து எப்போதும் என் மனதிலே விமர்சனம் எழுந்த வண்ணமே உள்ளது. அவர் மீதான சந்தேகமும் எப்போதும் என் மனதில் ஊசலாடவே செய்கிறது. நாம் பல்வேறு இன்னல்களுக்கும் முகம் கொடுத்து கட்டியெழுப்பியுள்ள சமாதான சூழ்நிலை வன்முறையைத் தோற்றுவிப்பதன் மூலம் மீண்டும் சின்னாபின்னமாகிவிடும். உலகம் முழுவதும் சர்வதேச யூத பயங்கரவாத சக்திகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே பொதுபலசேனா அமைப்பும் இன்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ முஸ்லிம்களுக்கெதிராக அதே யூத பாணியிலே இயங்கிக் கொண்டிருக்கிறது.
பொதுபலசேனா அமைப்பு மஹிந்த ராஜபக் இஷவின் காலத்திலும் இயங்கியது தானே?
பதில்: ஆம், இயங்கியதுதான். அதனால் தானே பேருவளை சம்பவம் இடம்பெற்றது. மஹிந்த ராஜபக் ஷவை தோல்வியடையச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியொன்றாகவே அதனை நாம் அன்று நோக்கினோம். சம்பந்தப்பட்ட பிக்குகளைத் தண்டிப்பதற்குக் கூட மஹிந்த முன்வரவில்லை.
ஆனால் பிக்குகள் என்று பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் செயலாற்றும் படி நாம் அன்று மஹிந்தவைக் கேட்டுக் கொண்டோம். அதனை அவர் அமுல் நடத்தத் தவறியமையின் பிரதிபலனாக அவருக்குத் தேவையான வாக்குகளை அவர் இழந்தார்.
பொதுபலசேனாவை உருவாக்குவதில் முன்னணி வகித்ததாக கோதாபய ராஜபக் ஷவின் மீது குற்றம் சுமத்தப்படுகிறதே?
பதில்: பொதுபலசேனாவுடன் தனக்கு தொடர்பில்லையென்று அவர் அதற்கு பதிலளித்திருந்தாரே.
மாகாண சபைத் தேர்தல்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடாத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறதே?
பதில்: ஏதாவது காரணம் காட்டி மேலும் காலம் தள்ளுவார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த அரசு இதற்கு முன்பும் இப்படித்தான் கூறிவிட்டு காலத்தை நீடித்துக் கொண்டது. இந்த அரசு தேர்தலை நடத்தினாலும் தற்கொலை செய்து கொள்ளும், தேர்தலை நடத்தா விட்டாலும் தற்கொலை செய்து கொள்ளும்.
காரணம் அவர்களுக்கு இனி மக்கள் ஆணை கிடைக்கப்போவதில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். தேர்தலை நடத்தாது போனால், மக்களுக்கிருக்கும் ஜனநாயக உரிமையை பறித்துக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் தற்கொலை செய்யத்தான் வேண்டும்.
அவ்வாறு தேர்தல் நடத்தும் பட்சத்தில் கூட்டு எதிரணியினரின் நிலை என்னவாகும்?
பதில்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து தேர்தலில் நின்றாலும் அல்லது வெவ்வேறாக நின்று போட்டியிட்டாலும் சரி இரு சாராரும் மண் கவ்வுவார்கள். கண்டிப்பாக கூட்டு எதிரணி முன்னெடுத்துவரும் செயற்றிட்டங்களால் அது வெற்றியீட்டவே செய்யும்.
மத்திய வங்கி ஊழல் தொடர்பாக இன்னும் சட்டம் செயற்படுத்தப்படவில்லையே?
பதில்: அரசாங்கத்திற்குள் இவ்விடயம் தொடர்பாக முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. கள்வர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். மத்தியவங்கி கொள்ளையடிக்கப்பட்டது. அது சாதாரண சம்பவமொன்றாக சித்திரித்துக் காட்டப்படுகிறது. அதில் முன்னிலை வகித்த பிரதமர் இப்போது சத்தமில்லாமலிருக்கிறார். கொள்ளையடித்தவருடன் விருந்துண்டு மகிழ்கிறார். எதிர்த்தரப்பு யாராகிலும் இது விடயமாக கதைத்தால், அவர்களைக் கூண்டில் அடைக்கிறார்கள். வரலாற்றில் பாரிய கொள்ளையாக இந்த விடயம் பதியப்படுவது உறுதி.
ஜோன் அமரதுங்கவின் நடவடிக்கை குறித்து அண்மையில் ஊடகங்களில் பலமாக பேசப்பட்டு வந்ததே?
பதில்: ஜோன் அமரதுங்க மக்கள் சொத்துக்களை நாசம் செய்தார். பின்னர் மீண்டும் அவ்வுடமைகளைச் செய்து கொடுத்தார் என்பதற்காக எப்படி மன்னிப்புக் கிடைக்கும்? பின்னர் ஊடகங்கள் மீது துஷண வார்த்தை பிரயோகங்களைச் செய்து மரண அச்சுறுத்தல் விடுத்தார். நல்லாட்சியைக் கொண்டு வருவதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்த இவர்கள் இன்று இப்படித்தானா நடந்து கொள்ள வேண்டும் என்று தான் நாம் கேட்கிறோம்.
எனவே இரு கூட்டுகளும் இணைந்து நாட்டுக்கு இழைத்துவரும் நாசம் மிகவும் பாரதூரமானதாகும்.
அனர்த்தம் ஒன்று நிகழ்ந்த வேளையில் அமைச்சரவை மாற்றம் தேவையா என்று அரசு மீது தொடுக்கப்படும் விமர்சனம் குறித்து….?
பதில்: உண்மையிலே அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நடந்தது ஒன்றுமில்லை. நல்லதொன்று நடக்குமாயின் அதற்கு கால, நேரம் என்பது அவசியம் இல்லை. ஆனால் இந்த மாற்றத்தில் நன்மை ஏதும் இல்லை.
இன்று உலகிலே சிறந்த நிதியமைச்சர் என்று போற்றப்பட்ட ஒருவரை ஓரம் கட்டிவிட்டு பொருளாதாரம் பற்றிய போதிய தெளிவில்லாத ஒரு புதுமுகத்தை நிதியமைச்சராக்கியிருக்கிறார்கள். மறுபுறத்தில் மங்கள சமரவீர போன்ற ஒருவரை ஊடக அமைச்சராக்கியதில் மத்திய வங்கி மோசடி மூலம் கொள்ளையடித்த பணத்திற்கு ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் விலை கொடுத்து வாங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கூட்டு எதிரணியினரின் எதிர்கால செயற்பாடு எவ்வாறு அமையும் எனக் கருதுகிறீர்கள்?
பதில்: தற்போது பின் தள்ளப்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு புத்திஜீவிகள், அரசியல் ஞானிகளை உள்ளடக்கி முற்போக்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தும் மீண்டும் மத மோதல் ஒன்றுக்கு வழிவகுக்காத விதத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் செயல்திட்டம் ஒன்றை மேற்கொண்டும் வருகின்றனர்.
மக்கள் நலன் கருதி நாம் இதனைச் செய்தாக வேண்டும். இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கூட்டு எதிரணி என்ற வகையில் எமக்கு அதுவொரு பாரிய சவாலாகவே உள்ளது.
சிங்களத்தில் : மஹேஷ் மலவர ஆரச்சி
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.
அத, விடிவெள்ளி பத்திரிகை