அக்கரைப்பற்று ஆலங்குளம் வீதியில் தீகவாபி சந்திக்கு அருகில் பயணித்த முஸ்லீம்கள் மீது நண்பகல் 12.30 மணியிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிங்கள முஸ்லீம் இனவாதத்தை தூண்டும் வகையில் மது போதையில் இருந்த கும்பலால் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்பாதையில் பயணித்த அக்கரைப்பற்று முன்னாள் மாநாகர சபை உறுப்பினர் அஸ்மி காயங்களுக்குள்ளானதுடன் அவர் பயணம் செய்த வாகனம் பலத்த சேதத்துக்குள்ளாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் சில முஸ்லீம் இளைஞர்களும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஒரு கல்லூரி மாணவன் தாக்கப்பட்டு அக்கரைப்பற்று தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வழியால் சென்ற பலர் சிங்கள காடை கும்பலினால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த இடத்திற்கு விரைந்த தமன பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தி உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அக்கரைப்பற்று முன்னாள் மாநாகர சபை உறுப்பினர் அஸ்மி தெரிவிக்கையில்:-
நிம்மதியாக வாழ விடுங்கள் மரண அச்சம் எம்மை பீதி அடைய வைத்திருக்கிறது.
இன்று 12.45 அக்கரைப்பற்று இருந்து ஆலங்குளம் ஊடாக அம்பாரை நோக்கி அங்கே ஜூம்மா தொழுகையை நிறைவு செய்து கச்சேரி யில் கடமை புரியும் நன்பரொருவரை சந்திக்க சென்ற வேளை திகவாபி சந்திக்கருகில் பாதை வழிமறிக்கப்பட்டு போத்தல் உடைக்கப்பட்டு கிடைப்பதை உணர்ந்து வாகனத்தை நிறுத்திய வேளை சுமார் பதினைந்து தொடக்கம் இருபது வரையிலான சிங்கள மொழி பேசுகின்றவர்கள் என்னை தாக்க வந்தனர், காரணமெதுமில்லாமல் தாக்கினர். வாகனத்தை சேதப்படுத்தினர். அவ்வேளை அந்த இடத்தில் இருந்த கடை முதலாளியும் ஏனைய இருவரும் என்னை அறிந்து கொண்டு என்னை காப்பாற்றினார்கள்.
அவ்வேளை ஒரு கணம் மரணத்தை உணர்ந்தேன்
பின்னர் பொலிஸார் தமன நிலையத்தில் இருந்து வரவைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனக்கு முன்னரும் அதே பாதையில் பயணித்த மேலும் சில முஸ்லீம் இளைஞர்களை தாக்கி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருகிறார்கள்.
என்னை தாக்கியவர்களும் என் உயிர் போகமல் தடுத்தவர்களும் சிங்களவர்களே...
இவ்வாறான சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமையும் இடம் பெற்றதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டார்கள்.