13வயது பாடசாலை மாணவி ஒருவர் 50வயது குடும்பஸ்தர் ஒருவரினால் தொடர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பிரஸ்தாப மாணவி தந்தையுடன் நேரில் சென்று பொலிசில் முறைப்பாடு செய்து 06தினங்களாகியும் இன்னும் சந்தேகநபர் கைதுசெய்யப்படவில்லை. இந்தநிலையில் சிறுவர் உரிமையைப் பாதுகாப்பது எப்படி ?
என்று பிரபல மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர் பொ.ஸ்ரீகாந்த் விசனத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அவர்மேலும் இது பற்றித் தெரிவிக்கையில்;:
இச்சம்பவத்தை அறிந்தும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் பொலிசார் தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபை சிறுவர் நன்னநடத்தை அலுவலர்கள் மற்றும் சிறுவர் உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதன் அர்த்தம் என்ன?
இத்தனைக்கும் பிரஸ்தாப சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 நாட்களாகியும் இன்னும் அவர் வீடு திரும்பவில்லை. பொலிசார் ஏன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கைதுசெய்யாமலுள்ளனர்...? ஏன் இந்த தாமதம்..? இந்த நிலையில் சிறுவர் உரிமையை எப்படிப் பாதுகாப்பது..? சிறுவர்தின விழாக்களில் மட்டும் பேசிவிட்டு ஊர்வலத்தை நடாத்திவிட்டுச்சென்றால் சிறுவர் உரிமை பாதுகாக்கப்பட்டுவிடுமா..?
துஸ்பிரயோகத்திற்கு இலக்கான சிறுமியே வெட்கத்தைவிட்டு அம்முறைப்பாட்டை செய்திருக்கிறார். நான்கூட அருகிலிருந்தேன். அதன்பிறகும் நடவடிக்கை இல்லையென்றால் சிறுவர் துஸ்பிரயோகம் நாட்டில் அதிகரிக்காமல் குறையவா செய்யும்?
இதற்கு நல்லாட்சியை குறைசொல்லி என்ன பயன்..? பொலிஸ் மாஅதிபருக்கும் ஜனாதிபதிக்கும் இது பற்றி இன்று அறிவிக்கவுள்ளேன் என்று விசனத்துடன்கூறினார்.