பம்பலபிட்டி , கொத்தலாவல எவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் மாவனல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கடத்தல் மற்றும் படுகொலைக்கு காரணமாக - 40 மில்லியனுக்கும் மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெள்ளவத்தை பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நாடத்தி வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெள்ளவத்தை பகுதியில் மேலும் இரு வர்த்தகர்களிடமும் பொலிஸார் விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாக குறித்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை விட மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுபிட்டியில் இருந்து தெஹிவளை வரையிலான அனைத்து சீ.சீ.ரி.வி. கமராக்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ள விசாரணையாளர்கள் அது தொடர்பில் பிரத்தியேகமாக மூன்று பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி மொத்தமாக இவ்விசாரணைகளுக்கு என 11 பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் கோடீஸ்வர வர்த்தகர் சகீப் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் கேகாலை பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரின் கீழ் 8 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலையாகும் போதும் இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் வெள்ளவத்தை, தெமட்டகொடை மற்றும் காலி வீதி பகுதிகளைச் சேர்ந்த ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதை தவிர்க்கும் முகமாக கடவுச்சீட்டுக்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பான முந்திய செய்திகளுக்கு இதை அழுத்தவும்
மேலும் இது தொடர்பான முந்திய செய்திகளுக்கு இதை அழுத்தவும்