யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கொலை தொடர்பில் பெறப்பட்ட தடயப் பொருட்களின் ஆய்வு அறிக்கை மற்றும் ஜின்டெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் மரபணு பரிசோதனை என்பனவற்றின் அறிக்கைகள் கிடைக்காத காரணத்தால் வழக்கை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி எஸ்.லெலின்குமார், சந்தேகநபர்களை அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த மே மாதம் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் வழக்கு விசாரணை குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், தொடரும் விசாரணைகளில் பல தடயப்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
மேலும் வித்தியாவின் உடலில் கண்டெடுக்கப்பட்ட மாதிரியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் மரபணுக்கள் காணப்படுவதால், அதனை பிரித்து அறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜின்டெக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வித்தியாவின் கொலைக்கு ஆரம்பத்தில் போதைப்பொருளை காரணம் காட்டியிருந்தாலும், தொடர்ந்து வித்தியா சம்பந்தப்பட்ட பொருட்கள் வௌ;வேறு இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டமை மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் பலகோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக வித்தியா கொலை தொடர்பில் கண்கண்ட சாட்சியம் உள்ளதாக கடந்த வழக்கு விசாரணைகளின்போது அரசாங்க தரப்பு சட்டத்தரணி தெரிவித்தமைக்கமைய, குறித்த நபரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.