பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் விவகாரம் இறுதி முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை கட்சியின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திருகோணமலை மூதூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நியமனத்தில் ஒன்றை திருகோணமலைக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அதற்கேற்ப முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.
இரண்டரை வருடங்களுக்கு அவருக்கு அப்பதவி வழங்கப்படவுள்ளது. அடுத்த இரண்டரை வருட காலத்தை வன்னிப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.
இன்னொரு தேசியப்பட்டியல் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. பெரும்பாலும் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவுள்ள தேசியப் பட்டியல் நியமனம் இரண்டரை வருடத்தின் பின்னர் குருநாகல் அல்லது புத்தளத்துக்கு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இந்த மாற்றங்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கும் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கு ஏதுவாக முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.