ஹேமாஸ் மருத்துவமனை நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் வருடம் காலி ஹபராதுவயில் கார்ல்டன் செவன்ஸ் ரக்பி தொடர் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வெளிநாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருப்பதாக போலியான கடிதமொன்றை ஹேமாஸ் மருத்துவமனைக்கு சமர்ப்பித்து, அவர்களுக்கான மருத்துவ வசதிகள் பெறப்பட்டிருந்தன.
எனினும் ஹேமாஸ் மருத்துவமனை நிர்வாகம் குறித்த விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவச் செலவுகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தொடர்பு கொண்ட போது அவ்வாறான காப்புறுதி எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த போட்டிகளை ஏற்பாடு செய்த நாமல் ராஜபக்சவின் கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் மருத்துவமனைக் கட்டணத்தை தாம் செலுத்துவதாக உறுதியளித்திருந்த போதிலும் அதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இதன் காரணமாக தமக்கு வரவேண்டிய நான்கு லட்சம் ரூபா மருத்துவக் கட்டணத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஹேமாஸ் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.