தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 45 பேர் நியமனம் பெறவுள்ளனர்.
மேலும் 20 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதியமைச்சர்களுமாக மொத்தம் 95 அமைச்சர்களை உள்ளடங்கியதாக புதிய அரசாங்கம் அமையவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள 15 அமைச்சு பதவிகளும் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சுப் பதவிகள் 17 உம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை நிறைவேற்றப்பட்டுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு அமைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் 30 க்கு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் விவாதமொன்றினையும் கோரியுள்ளது.
நிதி , கல்வி, பெருந்தெருக்கள், ஊடகம், சுகாதாரம், பெருந்தோட்டத்துறை, நீர்வழங்கல், நீர்வளம், மெகா பொலிஸ், முதலீட்டு அபிவிருத்தி, தென் மாகாண அபிவிருத்தி, ஆகிய அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கும், போக்குவரத்து, சிவில் விமான சேவை, மின்சக்தி, விவசாயம், நீர்பாசனம், பெற்றோலியம், கைத்தொழில், உயர்கல்வி, அரசநிர்வாகம், சமுர்த்தி, அனர்த்த முகாமைத்துவம் ஆகிய அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
இதேவேளை பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சுகள் ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. vi