நேற்று சீமா, இன்று வித்தியா, நாளை நீ அல்லது நான்.....!!

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்-

(ற. இஸ்ஸதுன்னிஸா, மருத்துவபீடம் - கிழக்கு பல்கலைக்கழகம்)


வெறுத்துப் போன மனதுடன் சீமாவுக்காய் எழுந்த கண்ணீரின் தொடராய் இந்தப் பதிவு தொடர்கிறது, என் உடன் பிறவா சகோதரி வித்தியாவைத் தொட்டு.

சீமா.. என் காத்தான்குடி மண்ணின் கறைபடிந்த கைக்குள் அகப்பட்டு மரித்துப் போனவள். பால்மணம் மாறா அந்தப் பச்சைக் குழந்தையும் காமுகன் ஒருவனால் சிதைக்கப்பட்டாள்.. சின்னாபின்னமாக்கப்பட்டாள்.. உருவழிக்கப்பட்டாள்.. இறுதியில் உயிரழிக்கப்பட்டாள்..

ஓங்கியெழுந்த கண்டனங்களும், உரிமைக்கான குரல்களும் சில மாதங்களில் நியதியாய் மெதுமெதுவாய் அமைதியடைந்தன.

இன்று வித்தியா..

ஆசைகளையும், இலக்குகளையும் கனவாய்க் கொண்டவள். மிக அருகில் தெரிந்த பூரிப்பான புது வாழ்க்கையை எதிர்பார்த்து நடந்தவள். யுத்தம் நிர்மூலமாக்கிய பிரதேசத்தில் இருந்து புதியதோர் வாழ்க்கைக்காய் புறப்பட்டவள். என் கண்காணாத் தோழி.. கொரூரமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறாள்.. காமுகர்களின் கோரப் பசிக்கு இரையாகி இருக்கிறாள்.. உயிர்போகும்வரை போராடி தோற்றுப் போய் எமை விட்டும் தூரப்போயிருக்கிறாள். 

மௌனித்துப் போகிறது மனம். சிந்திக்க மறக்கிறது மூளை. மடை திறக்கிறது விழிகள். தோற்றுப் போகிறது விரல்கள்..!

ஏ.. மட மானுட சமூகமே.. என்னவாயிற்று உனக்கு..?

அடிப்படைப் பண்பாட்டு வீழ்ச்சியில் இருந்து அதியுயர் ஆட்சி வரைக்கும் அராஜகமே தளைத்தோங்குவதைக் கண்டும் காணாமல் இருப்பதுதான் உனக்கு கைவந்த கலையாயிற்றோ??

நானும் குற்றம் சொல்ல விரும்பவில்லை மேலும்.. இரண்டு பாடங்களை மட்டும் இங்கு பதிந்துவிட்டுப் போய் விடுகிறேன்!

முதலாவது..

என் பதிவை வாசிக்கும் தாய்க்கும் தந்தைக்குமானது.. ஆணுக்கும் பெண்ணுக்குமானது. உங்கள் குழந்தையைச் சூழ்ந்துள்ள அபாயத்தை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பாலியல் துஷ்பிரயோகத்தின் அடிப்படை அலகு, வீடுதான் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

உங்கள் குழந்தை தன் சொந்தத் தந்தையால், சகோதரனால், கணவனால், பாட்டனால், மாமனால், மச்சானால், சிற்றப்பனால், பெரியப்பானால் என்று அத்தனை உறவுகளும் அதற்கு பல விதங்களில் அச்சுறுத்தலாய் அமைகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். 

வெளிப்படையாய் சிந்தியுங்கள். மூடி மறைப்பதை விட்டும் பூசி மெழுகுவதை விட்டும் வெளி வாருங்கள். உங்கள் குழந்தை உங்களிடம் ஓடோடி வந்து இன்னவர் என்னைத் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று கூறும் என எதிர்பார்க்காதீர்கள். அது ஒருக்காலும் நடக்காது. ஏனெனில் தனக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது அந்தக் குழந்தை.

எங்களில் எத்தனை பேர் வெளிப்படையாய் கற்றுக் கொடுத்திருக்கிறோம் எங்கள் குழந்தைக்கு, எது நல்ல தொடுகை (பழழன வழரஉh), எது கெட்ட தொடுகை (டியன வழரஉh) என்று?  எங்களில் எத்தனை பேர் கற்றுக் கொடுத்திருக்கிறோம் எம் குழந்தைகளுக்கு, எது பாலியல் துஷ்பிரயோகம் என்று??  வார்த்தைகளால் பேசுவதையே பாவமாய் நாம் கருதும்போது, எவ்வாறு எங்கள் குழந்தை அதை விளங்கியறிந்து வெளிப்படுத்தும் என நாங்கள் எதிர்பார்ப்பது??

நாங்களே எங்கள் குழந்தையிடம் பேசத் தயங்கும்போது, எவ்வாறு நம் குழந்தை தனக்கு நேரும் அநியாயங்களை எம்மிடம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பது?  இன்று ஆசிரியர் என்ற பெயரில், மௌலவி என்ற பெயரில், மத போதகர் என்ற பெயரில், ஆட்டோக்காரன் என்ற பெயரில், அண்டை வீட்டுக்காரன் என்ற பெயரில், கடைக்காரன் என்ற பெயரில், இன்னும் ஏதேதோ பெயர்களிலெல்லாம் தமக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் ஒவ்வொரு சிறுமியும், சகோதரியும் திணறிக் கொண்டிருக்கின்றபோது...

குறைந்தது ஓரிருவர் அவர்களுக்காய் குரலெழுப்பவும் தீர்வு தேடியும் களமிறங்க.. அந்தோ பரிதாபம்!  என் சமூக உலமாக்கள் என்றும், தலைவர்கள் என்றும் சொல்கின்ற ஒரு சிலர் அவர்களைப் பார்க்கின்ற ஒழுங்கும், அவர்களுக்கெதிராய் முன்வைக்கும் அப்பட்டமான விமர்சன வார்த்தைகளும் அப்பப்பா...!!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கெதிராய் ஒரு சகோதரி தன் ஆதங்கத்தை முன்வைத்தபோது அதற்கெதிராய் ஒரு உலமா(?) மேற்கோள்காட்டிய அவரது படுகேவலமான முகநூல் விளக்கம் இன்னும் என் கண்முன் வந்து போகிறது.
பெண்களுக்கெதிரான வன்முறை என்று நான் பேச வரவில்லை. 

இது எங்கள் வீட்டுக் குழந்தைக்கான, என் சகோதரிக்கான, என் தோழிக்கான வெளிச்சொல்ல முடியா அவலநிலை என்ற மனநிலையையே எம் ஒவ்வொருவருள்ளும் ஏற்படுத்த விரும்புகின்றேன். 

குறைந்தது உங்கள் வீட்டுப் பெண்கள் பற்றியேனும் கரிசனை கொள்ளுங்கள். 
உங்கள் குழந்தைக்கு அதனுடைய மொழியில் உலகில் உள்ள எல்லா விடயங்களையும் கற்றுக் கொடுங்கள்.

நல்லதையும் கெட்டதையும் அடையாளம் காண கற்றுக் கொடுங்கள்.
இந்த உலகில் அவளைச்சூழவுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்து வாழக் கற்றுக் கொடுங்கள்.

தைரியமாய் எதிர்த்துக் கேள்வி கேட்கக் கற்றுக் கொடுங்கள். தவறுகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டக் கற்றுக் கொடுங்கள். தன் உடம்பினதும், உளத்தினதும் இயற்கை மாறுதல்களை இயற்கையாகவே அறிந்துணரக் கற்றுக் கொடுங்கள்.

மார்க்கம் என்ற பெயரில் எதையும் திணிக்க முயலாமல் அவள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நேர்மையாக பதில் கூறி மார்க்கத்தை நடைமுறைப்படுத்துங்கள்.

தலையில் இருந்த துணியை ஏன் இறைவன் மார்பையும் நோக்கி இறக்கச் சொன்னான்? என்ற விதியை, இறைவனின் சட்டம் என்ற நிலையையும் தாண்டி அதன் நியாயங்களையும் தாற்பரியங்களையும் தெளிவுபடுத்தி இறைவனின் வார்த்தைகளை உண்மையாக்கி உணரச் செய்யுங்கள்.

எங்கள் வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு அவர்களது சிறுபராயம் முதலே பெண்கள் பற்றிய மகமையையும், யதார்த்தத்தையும் உணர்த்துங்கள். பெண்களை தன் சகோதரியாக, தன்னைப் போன்ற ஒரு மனிதப்பிறவியாகப் பார்க்கும் ஒழுங்கைக் கற்றுக் கொடுங்கள். பாலியல் துஷ்பிரயோகத்தால் ஒரு பெண் எந்தளவு தூரம் மன உளைச்சலுக்கு உள்ளாவாள் என்பதை நியாயமாகப் புரிய வையுங்கள்.

ஆணும் பெண்ணும் ஒரே ஆத்மாவில் நின்றும் படைக்கப்பட்ட படைப்பு என்பதை வலியுறுத்திக் கூறுங்கள்.  காதலுக்கும், காமத்திற்கும், யௌவன ஹோர்மோன் மாற்றங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கித் தெளிவுபடுத்துங்கள்.

பிழையான, தவறான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது எவ்வாறு அந்த இடத்தில் சரியாகவும், நீதியாகவும், மனிதனாகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்டிக் கொடுங்கள்.

தயவு செய்து உங்கள் குழந்தைகளுடன் வெளிப்படையாய் இருங்கள். ஒரு ஆண் சிறுவனின் சரியான சந்தர்ப்பத்தில் நாம் ஒரு சிறந்த தாயாக, தந்தையாக, சகோதரனாக, சகோதரியாக இருக்கத் தவறும் பட்சத்திலேயே அந்த வெற்றிடத்தை அவன் மோசமான நபர்களைக் கொண்டு நிரப்புகின்றான் என்கிற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிறுவர்கள் சிறுவர்கள் என்று அவர்களைத் தூரப்படுத்த வேண்டாம்.
80மூ மூளை 15 வயதிற்கு முன்னரே வளர்ச்சியடைந்து விடுகிறது. அந்த வயதெல்லைக்குள் நாம் சுட்டிக்காட்ட மறந்த பல விடயங்கள்தான் வயதான பின்னர் பக்கச்சார்பாக நோக்கப்படுகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

சீமா, வித்தியா போன்றோர் எங்கள் கைதாண்டிய நிலையில் இருந்தாலும், குறைந்தது எம் வீடுகளில் உள்ள பெண் சிறுமிகளையாவது காக்க வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

நான் பதிவிடும் இரண்டாவது பாடம்:
சீமா ஒரு முஸ்லிமல்ல.. 
அவள் ஒரு பெண் சிறுமி.. ஒரு சகோதர மனிதப் பிறவி.
வித்தியா ஒரு ஹிந்து அல்ல..
ஒரு பெண் யுவதி.. ஒரு சகோதர மனிதப் பிறவி.
என் ஒட்டு மொத்த மனித சமூகமே...
தயவு செய்து இப்படியான விடயங்களில் எம் இனம் தொடர்பான தனித்துவங்களை கொஞ்சம் தூர வையுங்கள்.

இதனை ஒரு மனிதனுக்கு நிகழ்கின்ற அடிப்படை உரிமை மீறலாக அல்லது ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையாகப் பாருங்கள்.
அன்று சீமாவுக்காய் குரல் கொடுத்த எம் முஸ்லிம் சமூகம் இன்று வித்தியாவுக்காய் குரல் கொடுக்க முன்வரவில்லை.. அனுதாபம் தெரிவிக்க தயாராகவில்லை..அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்படவில்லை..!
இன்று வித்தியாவுக்காய் குரல் கொடுக்கும் என் சகோதர சமூகம், அன்று சீமாவுக்காய் கண்டனக் கோஷமெழுப்பவில்லை.. போராட்டம் செய்யவில்லை.. நீதிக்காக அழுத்தம் கொடுக்கவில்லை..!

ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளுமே அதைத் தமக்குரிய கடமையாய் கைக்கொண்டது. நாம் இவ்வாறுதான் மாற்றப்பட்டிருக்கிறோம். எமது அரசியல்வாதிகளும் எமது மதத் தலைவர்களும் இதைத்தான் அறுவடையாய் தந்திருக்கிறார்கள் எமக்கு!! மனிதத்துவத்தை தாண்டிய ஒன்றாய் மதம் எம் தலைக்கடித்துவிட்டது.

இல்லை இல்லை..
அவ்வாறு எம் மூளைகள் சலவை செய்யப்பட்டுவிட்டது!!!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -