ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவார் எனத் தெரியவந்ததும், முப்படைத் தளபதிகளும், பொலிஸ் மா அதிபரும் அலரி மாளிகைக்கு அவசர அவசரமாக அழைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, எனினும் அந்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தின் துணையுடன் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் சதிமுயற்சிகள் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆங்கில பத்திரிகையொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்-
‘கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்திற்கு முன்னர் இராணுவம் வாக்களிப்பை குழப்பும் என்ற அச்சம் எதிர்க்கட்சிகளிடம் காணப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கில் இவ்வாறான குழப்பங்கள் ஏற்படலாம் என நினைத்தது. மேலும் அரசாங்கம் தோற்றாலும் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காது என்ற அச்சமும் காணப்பட்டது. தேர்தலை சுற்றி காணப்பட்ட இரு விடயங்கள் அவைதான். இந்த சமயத்தில் இவ்வாறான அச்சங்கள் தேவையற்றவை, இராணுவம் எந்த தருணத்திலும் ஜனநாயக அரசியலில் தலையீடாது என்பதை நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.
எனினும் தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தவுடன் இந்த அச்சம் அர்த்தமற்றது என்பதை அனைவரும் உணர்ந்தனர். 80 வீதமானவர்கள் வாக்களித்ததே இதற்கு காரணம். மேலும் இது மிகவும் அமைதியான தேர்தலாக காணப்பட்டது. நாடு முழுவதிலும் அவ்வாறே காணப்பட்டது. இதற்கான பாராட்டுகள் இராணுவத்திற்கே செல்லவேண்டும்.
ஒன்பதாம் திகதி அதிகாலை முன்னைய அரசாங்கம் தோற்றுக் கொண்டிருந்த வேளை பலர் இராணுவம் அதில் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தும் என்றே கருதினர். இது நடைபெறும் என உண்மையில் எதிர்பார்த்த பலரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் கூட வந்தன.
பின்னர் இரவு 2.00 மணிக்கு முப்படைகளின் தளபதி, பொலிஸ் மா அதிபருடன் நாங்கள் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டோம். நாங்கள் அங்கு சென்றது நல்லவிடயமாக அமைந்தது. அங்கு பலர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். சீற்றத்தில் ஆவேசத்தில் காணப்பட்டனர். எனினும் நாங்கள் இவ்வாறான சூழ்நிலைகளில் முடிவெடுப்பதற்கு பழக்கப்பட்டவர்கள். எங்கள் ஐந்து உணர்வுகளும் அன்று நல்லநிலையிலிருந்தன.
எங்களை அலரி மாளிகைக்கு வருமாறு ஜனாதிபதி அழைக்கவில்லை. முப்படைகளின் பிரதானியே அழைத்தார். மக்களின் ஆணையை ஏற்று பதவிவிலகுவதாக அறிக்கையொன்றை வெளியிடுமாறு நான் ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரிவித்தேன். அந்த குறுகிய நேரத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நான் எதிர்கட்சி தலைவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன்படி அதிகாரத்தை கையளிப்பது தொடர்பான பேச்சுக்களுக்காக அவர் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டார்.
அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வது, சதிப்புரட்சி முயற்சிகள் போன்றவை குறித்து அன்றிரவு அங்கு விவாதிக்கப்படவில்லை. சிலர் உணர்ச்சிவசப்பட்டவர்களாக ஊரடங்கினை அறிவிக்குமாறு கோரினர். எனினும் நானும் பொலிஸ் மா அதிபரும் அதற்கு அவசியமில்லை என தெரிவித்தோம்.
புலனாய்வு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் மூலமாக நான் ஓவ்வொரு நிமிடமும் நாட்டின் நிலவரம் குறித்து தகவல்களை பெற்று அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன்.
நாட்டில் முழுமையான அமைதி நிலவியது அதனால் ஊரடங்கிற்கான அவசியமிருக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாக வைத்து அவசர காலசட்டத்தை பிறப்பிக்க வேண்டிய தேவையில்லை என்பதை நான் தெளிவுபடுத்தினேன். அவர்கள் அந்த முடிவை எடுக்க விரும்பினால் சட்ட ஆலோசனைகளை பெறுவது நல்லது என்றும் நான் தெரிவித்தேன்’ என்றும் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.