சூறாவளி (அவதானி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திடம் இன்று முன்வைத்த முக்கிய கோரிக்கைளை ஏற்றுக்கொண்டு அக்கோரிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவதற்கும் அரச சார்பில் கலந்து கொண்ட அமைச்சர்கள் குழு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி, தவிசாளர் வசீர் சேகுதாவூத் உள்ளிட்ட குழுவினருக்கும் அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட முக்கிய அமைச்சர்களான டளஸ் அலகப்பெரும, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, ஜனாதிபதியின் செயலாளர் லலீத் வீரதுங்க ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
கடந்த சில காலங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்றித் தருவதாகவும், எதிர்வரும் காலங்களில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்பையும் அவர்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் தொடர்பில் அரசாங்கம் ஒரு உறுதியான உத்தரவாதத்தையும் அளிக்கும் இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு நல்லுறவைப் பேணுவதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டது.
மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரபின் கனவாக இருந்த தமிழ் பேசும் மக்களுக்கென கரையோர மாவட்டம் தேவை என்ற அறிவிப்புக்களை செய்து தருவதாகவும், முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுவதுடன், அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக கூடுதலான நிதிகளை ஒதுக்கீடு செய்து தருவதாகவும், இந்தப் பேச்சவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்களின்படி தெரியவருகின்றது.
இதேவேளை, பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தையின் முடிவகளை இதுவரை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாத நிலையில் தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.