பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கோரிக்கையினால் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தலைவர் ஹக்கீம் பச்சைக்கொடி .
நேற்று மாலை கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமின் இல்லத்தில் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தவிர ஏனைய ஸ்ரீ.மு.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்ட ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு முடிவு செய்ததை தலைவர் ஹக்கீம் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ.மு.கா.கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு கட்சித் தலைவருக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வந்தபோதிலும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளின் ஒருமித்த குரலினாலும் அசையாத நிலைப்பாட்டின் மூலமும் அந்த சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து மக்களின் கோரிக்கைக்கு ஏற்பவும் கட்சியின் போராளிகளினதும், கல்விமான்கள், கட்சியின் அபிமானிகளின் கோரிக்கைக்கு அமைவாகவும் பொதுவேட்பாளரை ஆதரிக்க கட்சி நாளை பகிரங்க அறிவிப்பை விடுக்கும் என்று தெரிய வருகிறது.
இது தொடர்பாக கட்சியின் செயலாளரை ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர் அவர்கள் தொடர்புகொண்டு கேட்ட போது.............. ”மக்கள் எதனை தீர்மானித்து விட்டார்களோ அதனையொட்டியதாகவே எமது கட்சியின் முடிவும் அமையும். மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை பெரும்பாலும் முடிவினை அறிவித்து விடுவோம்” என்றார்.