விமான நிலையம் மற்றும் விமான சேவை சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான சேவை சங்க ஊழியர்களின் சம்பள பிரச்சினையை அடிப்படையாக வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து தாம் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் என்.டப்ளியூ.பீ. முஹாந்திரம் தெரிவித்தார்.
10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு, மருத்துவ காப்பீடு, ஊழியர்களுக்கான கடனுதவி, விமான நிலைய பாதுகாப்பு துறையின் தலைமை அதிகாரியை நீக்க வேண்டும், ஊழியர்களுக்கு ஓய்வு அறையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தாம் முன்வைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியடைந்ததால், இறுதியில் தாம் இந்த முடிவுக்கு வந்தாகவும் சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக விமான சேவைகளுக்கு தடையேற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீ பரவியுள்ளதாக வீரகேசரி விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீ விபத்து காரணமாக விமானங்கள் இந்தியாவில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment