முஸ்லிம்களின் நலனிற்காக மிக மிக அதிகம் வாரி வழங்கிய வள்ளல்களில் மிகவும் முக்கியமான நபி தோழர் மூன்றாம் கலிபா உஸ்மான் இப்னு அஃபான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஒருமுறை மதினாவில் தண்ணீர் பஞ்சம். ஆனால் ருமாத் அல் ஜிஃபாரி என்ற ஒரு யூதனின் கிணற்றில் மட்டும் தண்ணீர் இருந்தது. பஞ்சத்தை முதலாக்கினான் அந்த யகூதி. ஒரு குடம் தண்ணீருக்கு முஸ்லிம்களிடம் அதிக விலை வாங்கினான் அந்த யகூதி.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு அறிவிப்பை செய்தார்கள். ” உங்களில் யார் அந்த கிணற்றை வாங்கி முஸ்லிம்களுக்கு நியாயமான முறையில் தண்ணீர் கிடைக்க உதவுகிறாரோ அவருக்கு சுவனம் நிச்சயம்” என்றார்கள்.
இதனை கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் அந்த யூதனை அனுகினார்கள். அவனோ தண்ணீர் வியாபாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அந்த கிணற்றை விற்க மறுத்தான். மிகச்சிறந்த வியாபார தந்திரங்கள் மிக்கவராக விளங்கிய உஸ்மான் அவர்கள், அவனிடம் அந்த கிணற்றை முழுவதும் தராவிட்டாலும் பரவாயில்லை, பகுதியை தா என்றார்கள். அதற்கு மிகப்பெரிய அளவில் ஒரு தொகையையும் தருவதாக வாக்களித்தார்கள். அதன்படி வியாபார ஒப்பந்தம் ஆனது.
ஒருநாள் உஸ்மான் தண்ணீர் எடுக்கலாம்… மறுநாள் யூதன் தண்ணீர் எடுப்பான்… இதுவே அந்த ஒப்பந்தம். உஸ்மான் அவர்கள் தனது தினத்தில் அனைவருக்கும் இலவசமாக தண்ணீரை வழங்கினார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான தண்ணீரை எடுத்துச் சென்றார்கள். மறுநாள் யூதனின் வியாபாரம் நடக்கவில்லை.
உஸ்மானின் புத்தி கூர்மையை உணர்ந்த யூதன் கிணற்றை முழுவதுமாக உஸ்மான் அவர்களுக்கே விற்றுவிட்டான்.அந்த கிணற்றை உஸ்மான் அவர்கள் மதினாவின் ஏழைகளுக்கு வக்ஃப் செய்துவிட்டார்கள்.இன்றும் அந்த கிணறு மதினாவின் ஒரு பகுதியை செழிப்பாகவே வைத்துள்ளது.
(மஸ்ஜிதுன் கிபிலைதைன் அருகில் இருக்கிறது இந்த “பிர் உஸ்மான்” உஸ்மானின் கிணறு)(ச)
0 comments :
Post a Comment